Thursday, September 20, 2018

உயிர்ப்பலிகொடுத்தால் கடவுள் அருள் கிடைக்குமா?

 தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள்

தன் உடல் பெருக்க இன்னொரு உடலைத் தின்பவனுக்கு இறையருள் இல்லை என்று வள்ளுவர் இக்குறளில் உறுதிபடக் கூறுகிறார். கருணை இல்லாமல் ஓர் உயிரைக் கொன்று கருணையே வடிவாகிய இறைவனின் அருளைப் பெறமுடியுமா? இறைவன் உயிர்களுக்கு வடிவம் கொடுத்தான்; மனிதன் இறைவனுக்கு வடிவம் கொடுத்தான். சிறு தெய்வம், குலதெய்வம் என்று கடவுளை இவன் படைத்தான். அந்தக் கடவுளின் பெயரால் உயிர்ப்பலி; உடலைக் கடவுள் உண்கிறாரா? இப்பொழுது குல தெய்வமும் கொல தெய்வமாய் மாறிப்போனது வழக்கில்; 




  அந்தக் கோவிலும்  கொலைக்களமானது. எந்தக் கடவுளும் கொலை செய்யென்று கூறியதில்லை. அப்படிக் கூறியிருந்தால் அது கடவுளாக இருக்க நியாயம் இல்லை. எந்த மதமும் கொல்லாமையைக் குற்றமெனக் கூறவில்லை. நபிகள் நாயகம் அவர்கள் மெக்காவில் யாரும் இரத்தம் சிந்தவோ, மரத்தைவெட்டவோ, உயிரைக் கொல்லவோ கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். அவர் மெக்கா வெற்றியின்போது யாரையும் பழிதீர்க்கவும் இல்லை; பழிதீர்க்க அனுமதிக்கவும் இல்லை. மெக்காவை அவர் புனித நகரமாக அறிவித்தார்.
    ''நீ பலி கொடுக்கும் தசையையும், இரத்தத்தையும் இறைவன் விரும்பவில்லை. உனது நம்பிக்கையை அவர் எதிர்பார்க்கிறார்'' என்கிறது திருக்குர்ஆன்(22:37). இந்தக் கருத்தில்தான் எத்தனை உண்மை இருக்கிறது. கடவுளின் பெயரால், கடவுள் படைத்த உயிர்களையே கொன்று படைப்பது எத்தனை முட்டாள்தனம். எல்லா உயிருக்கும் தந்தை கடவுள். அவர் தன் பிள்ளைகளின் உடலை உண்பாரா?
எல்லா உயிர்களுக்கும் உடலைக் கொடுக்கவும், எல்லா உடல்களிலிருந்தும் உயிரை எடுக்கவும் வல்லமை படைத்தவன் இறைவன். அவன் உயிர்ப்பலியை உங்களிடமிருந்து கேட்டுப்பெற அவசியமென்ன? நீங்கள் எந்த உயிரையும் உண்டாக்கவில்லையே! அதனைப் பலி கொடுக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? மந்திரங்கள் கூறி ஓர் உயிரைக் கொல்லும் நீங்கள், மந்திரங்கள் கூறி ஓர் உயிரை உண்டாக்க முடியுமா? கூடிக் குலாவி அன்பைப் பரிமாறும் இந்த உயிர்களைக் கொன்று பரிமாறும் கொடுமையைச் செய்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?
''பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்; மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்'' என்ற திருமந்திரப்  பாடலில் திருமூலர், இறைவனை வழிபட கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்னும் எட்டு ஒண்மலர் தேவையெனப் பாடுகிறார்.
இறையருள் பெற முதலில் கடைப்பிடிக்க வேண்டியது கொல்லாமையே. உயிரைப் பலி கொடுப்பதில் கிடைப்பதில்லை இறையருள். உங்கள் உள்ளத்தைப் பலி கொடுங்கள். புலனடக்கி அனல் மூட்டினால் அல்லவா அருட்பெருஞ்ஜோதியின் ஆனந்த நடனத்தைக் கண்டு அதிசயிக்க முடியும். நெற்றி நடுவே தென்படும் நேர்மையின் இலக்கணத்தை உற்று உற்று நோக்கினால் மட்டும் உண்மையை உணரமுடியாது. பற்றற்றவன் பாதங்களைப் பற்ற கருணை உள்ளத்தையல்லவா கற்றிருக்க வேண்டும். கடவுளின் பெயரால் கருணையற்றசெயல் காண்போரையெல்லாம் கலங்க அல்லவா செய்கிறது!

நலிதரு சிறிய தெய்வமென் றையோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
கண்டகா லத்திலும் பயந்தேன்


என்று வள்ளலார் பலி கொடுக்கும் கோயில்களைக் கொலைக்களமாக எண்ணி அச்சமுற்றுப் பாடுகிறார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே கடவுள் அருளைப் பெறமுடியுமெனப் போதித்த புண்ணியர் வள்ளலார். ''ஜீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்கிறவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள்'' என்கிறார். ''அருளென்பது கடவுளின் கருணை. கடவுள் இயற்கையின் விளக்கம். ஜீவகாருண்யமென்பது ஜீவர்களின் கருணை. ஜீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் கருணையைக் கொண்டு கருணையைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங்கூடும். வேறு எந்த வகையாலும் இயலாது'' என்றார். ஜீவகாருணிய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

''புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணியத் தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ் செய்தல், ஜெபஞ் செய்தல், பூஜை செய்தல், முதலிய சரியை, கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கி, உறக்கத்தை விட்டு, ஆசைகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாத-வர்களானால், மோட்ச மென்கின்ற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில் காத்திருந்து, மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லாது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறிய வேண்டும்.'' என ஜீவகாருண்யத்தைத் தெளிவுபடக் கூறினார் வள்ளலார்.

ஜீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும், ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது என்று கூறி சாட்சியாக வாழ்கிறார் வள்ளலார்.
''உணர்ச்சியைக் கிளப்பக் கூடிய உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு இறைச்சியைச் சொல்லலாம். இயற்கையாகவே இது அசுத்தம் உடையதாகையால் இதைத் தவிர்க்க வேண்டும். இன்னோர் உயிரைக் கொன்றுதான் இறைச்சியைப் பெறுகிறோம். உண்ணுகிற அந்த ஒரு கணத்திற்கு நமக்கு இன்பம் கிடைக்கிறது. நமது இந்தக் கணநேர இன்பத்திற்காக ஒரு பிராணி தன் உயிரையே விட வேண்டியுள்ளது. இந்த நாட்டினுடைய சட்டம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், இங்கிலாந்தில் கசாப்புக் கடைக்காரன் எவனும் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒருக்காலும் அமர முடியாது. காரணம், இயல்பாகவே அவன் கொடிய உள்ளம் படைத்தவனாக கருதப்படுவதுதான். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்'' என்றார் விவேகானந்தர்.

''மாமிசம் துர்நாற்றத்தை உடையது; அது கீழ்ப்பட்டோர் உணவு'' என்றார் புத்தர்.

      ''அன்பு என்பது உயிரின் இயல்பு. ஆகவே, எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள்'' என்றார் மகாவீரர்.

''ஜீவகாருண்யம் உள்ளவர்களிடம் தெய்வங்களும் பணிந்து நிற்கும்'' என்றார் ஆதிசங்கரர்.

       ''இல்லறத்தாருடைய கடமைகளாவன உயிர்களிடம் அன்பு, பக்தர்களுக்குச் சேவை, கடவுளின் புனித நாம ஜபம் ஆகியவை'' என்றார் இராமகிருஷ்ணர்.

    ''எல்லா உயிரினங்களிலும் நான் இருக்கிறேன். அவற்றின் உருவத்தில் உலவிக் கொண்டிருக்கிறேன். என்னைப் படைப்புகள் அனைத்திலும் பார்க்கிறவனே எனக்கு உகந்தவன்'' என்றார் ஷிரடி சாயிபாபா.

       ''பிறஉயிர்களுக்குத் தீங்கு செய்பவர் முதலில் தம்முயிருக்கே தீங்கு செய்து கொள்கிறார்'' என்றார் இரமணர்.    

    இவர்களைப் போல், இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள், சித்தர்கள், சமயச் சொற்பொழிவாளர்கள் கொல்லாமையை வலியுறுத்துகின்றனர். அனைவருமே இறையருள் பெற்றவர்கள். இவர்களுக்குக் கிடைத்த அருள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை? காரணம், இவர்களில் யாரும் இறையருள் பெற உயிர்ப்பலி தந்ததில்லை.

உயிர்களின் மீது இவர்கள் கொண்ட கருணையே இறையருள் தந்தது. உலக உயிர்களின் துன்பத்தை நீக்க இவர்களாற்றிய செயல்கள் அளவிட்டுக் கூற இயலாது. இப்படி உயிர்ப்பலி கூடாது என்று கூறிய உத்தமர்கள் ஏராளம்.

''எல்லா உயிர்களிலும் நான் சமபாவத்துடன் இருக்கின்றேன். காற்று எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே உயிர்கள் அனைத்தும் என்னிடம் நிலைபெற்று இருக்கின்றது'' என்கிறது கீதை.

''பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே'' என்றார் நபிகள் நாயகம். (குர்ஆன், சுரா6:38)  ''கொலை செய்யாது இருப்பாயாக'' என்கிறது பழைய ஏற்பாடு.(19:18) ''இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்களே இரக்கம் பெறுவார்கள்(5:3)'' என்றார் இயேசுநாதர். கருணையோடு ஆட்டைத் தடவிக் கொடுக்கும் இயேசுநாதரைத்தான் கையெடுத்து வணங்குகிறோம். கையில் கத்தியோ கறித்துண்டோ வைத்துக் கொண்டு இருந்தால் அவரை வணங்க மனம் வருமா? உண்மையை உணருங்கள். இறையருள் உயிர்ப்பலியில் இல்லை. கொல்லாமை என்னும் நல்லோர் நெறியில் உள்ளது. இதுவே மனிதனைப் புனிதனாக்குகிறது. கடவுளால் அமைக்கப்பட்ட உயிர்களின் உடல்கள், மனிதனால் அமைக்கப்பட்ட கோயில்களை விடச்  சிறந்தவை. அந்த உயிர்களைக் கடவுளின் பெயராலும், பண்டிகைகளின் பெயராலும் அழிப்பது அறியாமையின் வெளிப்பாடு.

இயேசுநாதரின் கையிலிருக்கும் ஆட்டைக் கூட எப்பொழுது தரையிறங்கும் தலையெடுக்கலாம் என்று காத்துக்கிடக்கும் மிருகக் கூட்டங்களில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள். ''கர்த்தர் என் மேய்ப்பரா யிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்'' என்பது கர்த்தரின் அருள் கரங்களில் தவழ்ந்த ஆட்டுக் குட்டியின் அனுபவ வார்த்தைகள். அந்த ஆட்டைக் கொன்று தின்று அவர் கரங்களில் ஆடாய்  தவழக்கூட அருகதை இல்லாதவர்களாகி விடாதீர்கள்.  

நாமெல்லாம், ஆட்டைத் தன் கருணைக் கரங்களால் தடவிக்கொடுத்த கர்த்தரின் வாரிசுகள்; நாம் தின்பதெல்லாம் கர்த்தரின் கைகளில் தவழ்ந்த ஆட்டின் வாரிசுகள்; நினைத்துப் பார்க்க முடிகிறதா? நீங்கள் கொன்று தின்னத்துடிக்கும் ஒவ்வொரு ஆடும் கர்த்தரின் கரங்களிலிருந்து தவழ்ந்து வந்தவைதாம். தேவன் சொன்ன பரிபூரண வாழ்வில் பரிணமிக்க உயிர்க்கொலையை விட்டே ஆகவேண்டும் என்பதே தேவன் நீதி. எங்கே கருணை பிறக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். கருணையற்ற இடத்தில் கடவுள் இறக்கிறார்.

நமக்கு உள்ள உயிர்பயமும், வலிவேதனையும், எல்லா  உயிர்களுக்கும் உண்டு. உங்களை ஒருவர் கொல்ல வந்தால் உங்கள் உள்ளம் என்ன பாடுபடுமோ அதேபோல்தான் எல்லா உயிர்களின் மனமும் துடிக்கின்றன. அந்தத் துடிப்பில் இறையருள் கிடைக்குமா?

''அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
 பொருள்அல்லது அவ்வூன் தினல்.'' (குறள் 254)

என்ற குறள் மூலம் எந்த உயிரையும் கொல்லாமல் இரக்கம் காட்டி வாழ்வதே அருள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது என்று உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

முன் ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக உடலெடுத்த இரு உயிர்கள், அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களின் விளைவாக அண்ணன் ஆடாகவும், தங்கை மனித உடலெடுத்தும் பிறந்திருக்கலாம். இப்பொழுது நீங்கள் கொன்று தின்னத் துடிக்கும் அந்த ஆடு முன் ஜென்மத்தில் உங்கள் சகோதரராகவும் இருந்திருக்கலாம். சிந்தித்துப்பாருங்கள். உடல்கள்தாம் வேறுபடுகின்றன. உயிர்கள் வேறுபடுவதில்லை. உயிர் பிரிந்ததும் உடலழிகிறது. உயிர் அழிவதில்லை. அப்பொழுது பிரிந்த உயிர், வாழ்ந்த வாழ்வின் விளக்கம் விவரிக்கப்படுகிறது. அவற்றின் பாவ புண்ணியங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதனைப் பொறுத்தே அவை மற்றொரு உடலைப் பெறுகின்றன. உடலில்லாத உயிர்கள் அறியாமை வயப்படுகின்றன. இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால் தூக்கத்தை எடுத்துக்கொள்வோம் தூக்கமென்பது தினந்தோறும் ஏற்படும் மரணமே. தூக்கத்தில் நாம் அறியாமை வயப்பட்டிருக்கிறோம். இறைசக்தி நமக்கு விழிப்பு நிலையை உண்டாக்குகிறது. இறைசக்தி நம்மை எழுப்பவில்லையென்றால், தூங்கியவர் தூங்கியவர்தாம். இவ்வாறு இரண்டு ஜென்மங்களுக்கு இடைப்பட்ட ஆழ்ந்த தூக்கமே மரணமாகிறது. இறைசக்தி விவரிக்கும் விழிப்பு நிலையே பிறப்பாகிறது. 

தூங்கியெழுபவர் தூங்கும் முன்னும், விழித்து எழுந்த பின்னும் மனிதனாகவே இருக்கிறார். மரணம் அப்படியன்று. உடல் பிரிந்த பின்பு அந்த உயிரின் உணர்வு அலசி ஆராயப்படுகிறது. அந்த உயிர் சம்பாதித்த ஊதியம் கணக்கிடப்படுகிறது. சிறந்த ஜீவகாருண்ய ஒழுக்கமே உயிருக்கு உயர்ந்த ஊதியமாகிறது. அது குறையும் பட்சத்தில் பிறப்பின் தகுதி குறைக்கப்படுகிறது. மனிதனாய் இறந்தவன் மலத்தின் புழுவாகவும் மாறிப்பிறக்கிறான். 

எத்தனையோ ஜென்மங்கள்  எடுத்த பின்தான், நமக்கு இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த புண்ணியங்களின் பயனாகவே இந்த மனிதப் பிறவியைப் பெற்றுள்ளோம். பிறவிப் பெருங்கடலைக் கடக்க மனித உடலே படகாக அமைகிறது. மனித உடலே முக்திக்கு வழிவகுக்கிறது. இந்த மனிதப்பிறவியின் மகிமையை உணருங்கள். உயிர்களைக் கொன்று பாவங்கள் பல செய்து புல், புழு, பூண்டாய்ப் பிறக்காதீர்கள்.

 கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
 தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
 பன்றி யாப்படி யிற்பிறந் தேழ்நரகு
 ஒன்று வார்அரன் ஆணையி துண்மையே.

எனத் திருமூலர் திருமந்திரத்தில் கொலை செய்யச் சொல்லிக் கூறினவரும், அதைத் தின்னச் சொல்லித் தூண்டினவரும் பன்றியாய்ப் பிறப்பர் என்று ஆணையிட்டுக் கூறுகிறார்.

பிறவிகள் பல. அதில் பிறப்புகள் பல. உயிர்களுக்கு ஊழ்வினை உடுத்திவிடும் உன்னத உடைகள்தாம் உடல்கள். அதில் மனித உடை நாம் செய்த புண்ணியத்திற்கு ஆண்டவன் அளித்த அற்புத ஆடை. இந்த ஆடையின் அவசியத்தை அனுபவியுங்கள். புண்ணியங்கள் செய்யாவிட்டாலும் பாவங்கள் செய்யாதீர்கள். இந்த மனிதப் பிறவியேனும் மீண்டும் கிடைக்கட்டும்.

                                                                               - சத்தியதீபம் சிவகுரு

No comments:

Post a Comment